முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதையிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 10 ஆவது பட்டமளிப்ப்பு விழா ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டடார்.
இதனையெடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ்
வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 10 ஆவது பட்டமளிப்ப்பு விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி வைத்தார். இது கல்முனை மண்ணுக்கு கிடைத்த அதியுயர் கௌரவமாகும்.
'மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது அரசியல் அதிகார பலத்தினால் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்தார். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு அடையாளத்தையும் உறுதிப்படுத்தினார்.
முன்னாள் அமைச்சர் மன்சூர், குவைத் தூதுவராக பதவி வகித்த காலத்தில் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்காக குவைட் நாட்டின் நிதியினை பெற்றுக் கொடுத்திருந்தார்.
இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்கின்ற இப்பல்கலைக்கழகத்தை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகரான வசதிகள் நிறைந்த கல்விக்கூடமாக உயர்த்துவதற்கு அவர் கால்கோளாக அமைந்துள்ளார்.
தனது தூதுவர் பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட இந்நடவடிக்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment