திருகோணமலையில்
ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை வங்கியின் ஏல விற்பனையில் நகைகளை
வாங்குவதற்காக வந்ததாகக் கூறப்படும் களுத்துறை அட்டுலுகமவைச் சேர்ந்த
எம்.எச்.நஸ்ரின் (35 வயது), இன்று (07) காலை, பலாங்கொடை ஹல்துமுல்லையில்
வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, அட்டுலுகம, பண்டாரகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை ஏலத்தில் வாங்கவந்து, ஏலம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இடைநடுவில், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவருடைய தந்தையான முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் முறைப்பாடு செய்திருந்தார்.
அவர் ஏலத்துக்குச் செல்லும் போது, ஒரு கோடி ரூபாயைக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த வர்த்தகரை யாரும் கடத்தவில்லை எனவும், அவர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து வவுனியாவுக்கு வந்து, பின்னர் கொழும்புக்குச் சென்று அங்கிருந்து பதுளைக்குப் பயணித்துக் கொண்டிருந்த போதே, ஹல்துமுல்லையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த வர்த்தகரை இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment