
இந்த வழக்கின் பிரதிவாதிகளான சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 10 கோடி ரூபாவை இந்திய உச்ச நீதிமன்றம் அபராதமாக வித்தித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து பிரதிவாதிகள் மூவருமே குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 1991- 1996 காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக 66.66 கோடி ரூபா சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தமிழக இலஞ்ச ஒழிப்புப் பொலிஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004 ஆம் ஆண்டு பெங்களூரிற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இறுதியில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாவும், சசிகலா உள்ளிட்டோருக்கு 10 கோடி ரூபாவும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment