-பிறவ்ஸ்-
இடம்பெயர்ந்து
வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்களுடைய சொந்த
மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர்
நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
இடம்பெயர்ந்தவர்களின்
வாக்களிப்புக்கான "தற்காலிக சட்ட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம்"
தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் (04) இடம்பெற்ற விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
தேர்தல்கள்
ஆணைக்குழுவின் தலைவர், நீதியமைச்சர், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன்
மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக, நான்கு
வருடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடாக, இந்த
சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுத்தம்
மற்றும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து
வெளிமாவட்டங்களில் தங்கியிருப்போர், வாக்காளர் இடாப்பில் தங்களது
பெயர்களை பதிவுசெய்யவேண்டுமாயின், தங்களது சொந்த மாவட்டத்தில்
அவர்களுக்கு சொந்தமாக வீடு இருக்கவேண்டுமென ஏற்கனவே உள்ள
தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து
வெளிமாவட்டங்களில் தங்கியிருப்போர், சூழ்நிலை காரணமாகவே அங்கு
இருக்கின்றனர். தங்களது சொந்த இருப்பிடங்களில் மீள்குடியேற
விரும்பினாலும் அரசாங்கம் அதற்காக செய்கின்ற பங்களிப்பு போதைமை,
பொருத்து வீடுகள் பிரச்சினை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்
காரணமாக அது முடியாதிருக்கின்றது. இந்நிலையில், அங்கு
அவர்களுக்கு வீடுகள் இருக்கவேண்டுமென எதிர்பார்க்க முடியாது.
இதுதொடர்பாக,
அமைச்சரிடமும் தேர்தல்கள் திணைக்களத்திடமும் நாங்கள் பல தடவைகள்
பேசிய பின்னர், தேர்தல் திணைக்களத்தின் தவிசாளர் ஏற்கனவே உள்ள
ஏற்பாட்டின் பிரகாரம் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான
சந்தர்ப்பத்தை 4 வருடங்களுக்கு வழங்கியுள்ளார். ஆனாலும்,
விருப்பமில்லாமலேயே தேர்தல் திணைக்களத்தின் தவிசாளர் இந்த
அனுமதியை கொடுத்துள்ளார்.
வேறு
மாவட்டங்களில் வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்களை
பதிவுசெய்யாத இடம்பெயர்ந்த வாக்காளர்கள், சொந்த மாவட்டங்களில்
வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம்
செய்துகொடுக்கவேண்டும். சொந்த மாவட்டத்தில் வீடு இருக்கிறதா
இல்லையா என்பது அதற்கு தடையாக இருக்கக்கூடாது. இடம்பெயர்ந்தோர்
வாக்களிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்துகூட சிந்திக்க
விருப்பமில்லாத ஒருவராகத்தான் தேர்தல்கள் ஆணையாளர் இருக்கிறார்.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்து ம்
பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களினதும்
பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக இந்த வாக்குரிமைகள்
பயன்படுத்தப்படவேண்டும். தற்காலிகமாக 4 வருடங்களுக்குத்தான்
அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது
வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த 4 வருடங்களுக்குள் அரசாங்கம்
அனைவரையும் மீள்குடியேற்றிவிடுமா என்பது இன்னும்
கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இதனால்
தற்காலிகமாக தங்கியிருக்கின்ற மாவட்டத்தில்தான்
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்துக்குள் அவர்களை தள்ளுகின்ற சூழல் உருவாகும். இதை,
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம், வெளியேற்றப்பட்ட அகதி தனது
சொந்த இடத்துக்கு திரும்பிச் சென்று வாக்களிக்கின்ற உரிமை
வழங்கப்படவேண்டும்.

Post a Comment