முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று (6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறும்போது சபை அமர்வை புறக்கணித்து பாராளுமன்றத்தினுள் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட கண்டி திகன பிரதேசங்களுக்கு நேரில் சென்று அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்ற அமர்வுக்கு விரைந்து சென்று ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் குறித்த இனவாத தாக்குதலால் முஸ்லிம் இளைஞரின் உயிர் அநியாயமாக காவு கொள்ளப்பட்டுள்ளதனையும் தான் கண்ணுற்ற விடயங்களையும் கூறி பாராளுமன்ற சபை அமர்வின்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.
அதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், பைசால் காசிம், அமீர் அலி, ஏ.ஆர். இஸ்ஸாக், இம்ரான் மஃரூப், எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரகுமான் ஆகியோர் எச்.எம்.எம். ஹரீசுடன் இணைந்து பாராளுமன்ற அமர்வு நடைபெறும்போது நிலத்தில் அமர்ந்து முஸ்லிம்; சமூகத்தை பாதுகாக்குமாறு கோசமிட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுடன் றிசாத் பாதியுதீன் பின்னர் இணைந்து செயற்பட்டார்.
இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் 'முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லை', 'முஸ்லிம் சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது உடனடியாக பாதுகாப்பை தா', 'மக்களை பாதுகாரு' போன்ற கோசங்களை எழுப்பினர். அதையடுத்து சபை நடைவடிக்கைகள் சீர்குலைந்தது.

Post a Comment