-எம்.வை.அமீர், யு.கே.காலிதீன்-
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான
மக்கள் இயக்கம் (CaFFC) ஏற்பாடு செய்திருந்த வாக்காளர்களைப்
பதிவுசெய்வது தொடர்பான அறிவுட்டும் நிகழ்வு 2016-09-24
ஆம் திகதி அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில்
இடம்பெற்றது.
“கபே” அமைப்பின்
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் “கபே” அமைப்பின்
தேசிய இணைப்பாளர் ஏ.ஏ.மனாஸ் மக்கீன் பிரதம வளவாளராகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின்
சிரேஷ்ட விரிவுரையாளர் சரீர் அப்துல் வாஹித் மற்றும் அமைப்பின் வடக்கு கிழக்கு
இணைப்பாளர் திலக் சமந்த ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.
வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொருவரும்
வாக்களிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், வருடாவருடம் புதிப்பிக்கப்படும்
ஒரேயொரு ஆவணமான வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது, வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரதும் கடமை என்ற
விடயமும், வாக்களிக்காது விடின் தகுதியற்றவர்கள் தலைவர்களாக வர வாய்ப்பை நாங்களே
ஏற்படுத்திக் கொடுப்பது போன்றாகிவிடும் என்ற உண்மையும் இங்கு
பிரஸ்தாபிக்கப்பட்டது.
வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு
செய்வதும் தேர்தல்களில் நீதியானமுறையில் பங்குகொள்தல் போன்ற விடயங்களில் கபே
அமைப்பு மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது எதிர்காலத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக பங்குகொண்டிருந்தவர்களின்
கருத்துக்களும் கோரப்பட்டு அவைகளும் பதிவு செய்யப்பட்டன.

Post a Comment